மாணவர்கள் மோதல்: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை
நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் லட்சுமி நாராயணன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மகன் ஆகாஷ் (18).
லட்சுமி நாராயணனும், ஆகாசும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர். இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
நேற்று பல்கலைக்கழகத்திற்கு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது வகுப்பறைக்குள் செல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர்.

அப்போது லட்சுமி நாராயணனுடன் ஒரே வகுப்பில் படித்து வரும் முத்துச்செல்வம், அருண், மதார், மதுசூதனன், சுந்தர், மற்றும் சில மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள், அங்கு மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த லட்சுமி நாராயணன் மற்றும் ஆகாஷை தடுத்து நிறுத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று கூறினர்.
இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாகவும் சில மாணவர்கள் வந்தனர். இதனால் வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியது. இந்த மோதலில் லட்சுமி நாராயணன் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் மற்றொரு தரப்பில் முத்து செல்வம் என்ற மாணவருக்கும் காயம் ஏற்பட்டது.

இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இருதரப்பு மாணவர்களும் பேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு மறுதேதி அறிவிக்கும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.







