கவின் கொலை வழக்கு: வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித், தந்தை சரவணனை ஆஜர்படுத்திய போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் , அதே பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மகளான சித்த மருத்துவர் சுபாஷினியை கவின் காதலித்துள்ளார். இது பிடிக்காததால் சுபாஷினி சகோதரர் சுர்ஜித், அவரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சுர்ஜித், அவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவின் கொலை செய்யப்பட்ட நாளில் சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு வெயிலாச்சி ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் உலக ராணி ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், அந்த இடத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர்.
இதற்கிடையே கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருகிற 11ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
முன்னதாக கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறையில் இருந்து வேனில் அழைத்து வரப்பட்டனர், வேனில் இருந்து இறங்கியபோது சரவணன் மாஸ்க் அணிந்து இருந்தார். சுர்ஜித் டவல் மூலம் முகத்தை மறைத்து இருந்தார். நீதிமன்றத்தில் சுர்ஜித் அழுதபடி ஆஜரானார்.
விசாரணை முடிந்ததும் சுர்ஜித் மற்றும் சரவணன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்,







