தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு: 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 32,554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 49,845 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்து, மூன்று நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 32,288.70 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 48,649 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சில முக்கியமான திட்டங்கள் பற்றிய விவரங்கள்:
சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கை இழை உற்பத்தியில், உலகளவில் முன்னணி நிறுவனமான RGE நிறுவனம், இந்தியாவிலேயே, முதன் முறையாக, தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்திட முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், 4,953 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1,065 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
Kaynes Circuits India Private Limited நிறுவனம் – தமிழ்நாட்டில் 4,995 கோடி ரூபாய் முதலீட்டில், 74 Layer PCB, HDI PCB, Flexible PCB உற்பத்தி, உயர்செயல்திறன் laminates, Camera Module அசெம்பிளி, wire harness assembly போன்ற மேம்பட்ட மின்னணுவியல் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை அமைக்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் 4,700 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், தூத்துக்குடி ஒரு எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக வளர்ச்சி பெறும்.
Yeemak Pvt Ltd & Jeanuvs நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில், multilayer PCB, artillery shells, radar systems மற்றும் நுகர்வோர் மின்னணு உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளன. இத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட முதலீடு 3,400 கோடி ரூபாய் மற்றும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு 7,600 நபர்கள் ஆகும்.
சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் இந்திய ரெயில்வேக்கு ரெயில் பெட்டி உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம், தூத்துக்குடியில், கப்பல் கட்டுமானத்திற்கான உதிரிபாகங்கள் தயாரிக்க 1500 கோடி ரூபாய் உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில், ஒரு உற்பத்தி ஆலையை நிறுவன முன்வந்துள்ளது.

சக்தி குழுமம் – வெடிபொருள், உந்துசக்தி உற்பத்தி மற்றும் பரிசோதனை ஆலையை சக்தி குழுமம் தூத்துக்குடியில் அமைக்க முன்வந்துள்ளது. 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாலை நிறுவப்படுவதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி மேலும் வலுப்படும்.
Ethereal Exploration Guild என்ற விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், தூத்துக்குடியில் நடுத்தர வகை ராக்கெட் என்ஜின்கள் உற்பத்தி மற்றும் சோதனை செய்வதற்கான புதிய ஆலையை அமைக்கவுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் தூத்துக்குடி ஒரு முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவைச் சேர்ந்த தோல் அல்லாத காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான Hwaseung நிறுவனம், 1720 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ஒரு உற்பத்தி நிறுவனம் அமைக்க முன்வந்துள்ளது.
Mobius Energy நிறுவனம் 1000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீட்டில், தேனி மாவட்டத்தில் சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் உற்பத்தி ஆலை நிறுவிட முன்வந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 265.15 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1196 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்தார்.
TATA Power Solar, Infinx மற்றும் Pinnacle Infotech ஆகிய மூன்று தொழில் நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.







