ரெயில் நிலைய விழாவில்”ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே..” பாடல் பாடிய இசையமைப்பாளர் பரத்வாஜ்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 123ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் பரத்வாஜ் கலந்து கொண்டார்.
இவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்.
நிகழ்வில் பேசிய பரத்வாஜ், பாடல் பாடி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஆட்டோகிராப் படத்தில் அவர் இசையமைத்து பாடிய ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ என்ற பாடலை பாடினார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் இந்த பாடலை ரசித்து கேட்டு ஆரவாரம் செய்தனர். விழாவில் இசை அமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில்,”நான் இரவணசமுத்திரம் பகுதியில் பிறந்தவன். ஆனால் டெல்லியில் வளர்ந்தவன். இரண்டுக்கும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் இருக்கிறது. டெல்லியில் இருந்து இங்கு வரும்போதெல்லாம் ரெயில்களில் தான் வருவோம்” என்றார்.

பின்பு மீண்டும் அவர் ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…’ பாடலை பாடினார். பின்பு அவர் பேசுகையில், “இந்த பாட்டை கேட்டால் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். நான் சென்னையில் தான் இருந்தேன். இப்போது கிராமத்திற்கு வந்துவிட்டேன். இங்கு என்னுடைய சினிமா துறையை ஞாபகப்படுத்தி பேசினார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இந்த கிராமத்திற்கு கலை வடிவில் முன்னேற்றம் அடைய என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்றார்.







