ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் நடனமாடிய 3 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (வயது 30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது.

இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கிலும் வைரலாகப் பரவியது.
அதுமட்டும் இன்றி கோவில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் வீடியோவும் வெளியானது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதிவிநாயகம் புகார் அளித்தார்.
அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோவில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.







