வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி செய்த பெண் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு கும்பல் மோசடி செய்தது.

இதுகுறித்து மாயாண்டி அளித்த புகாரின்பேரில், நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், அவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரெஜின் என்பவர் பல்வேறு மாநிலங்களுக்கும் மாறி மாறி சென்று பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு மும்பையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றவர்களையும் கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய உமா என்பவர் டெல்லியில் தலைமறைவாக இருந்ததை தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு முத்துராமலிங்கம், பெண் போலீசார் பரமேஸ்வரி, பகவதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் டெல்லி சென்று, அங்கு பதுங்கியிருந்த உமாவை (40) மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்தனர். கைதான உமாவை நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும், இந்த கும்பலை சேர்ந்த சிலரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்







