தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கடலுக்குள் தெரியும் சிவன் கோவில்
குஜராத் மாநிலத்திலுள்ள சிவன் கோவில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! இந்த கோவில் குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் மூழ்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே இக்கோவில் உள்ளது.
இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோவில் கடலுக்குள் மறைந்திருக்கும்.பின்னர், கடல் உள்வாங்கி கோவிலுக்குச் செல்ல பாதை உருவாகும்! ஆனால், கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் கோவிலுக்கு சென்று திரும்புகிறார்கள்.
இந்நேரத்திற்குப் பிறகு கோவிலை கடல்நீர் சூழ்ந்துகொள்கிறது. இந்தக் கோவிலை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் கட்டியதாக நம்பப்படுகிறது.
மகாபாரதப் போரில், தங்கள் சகோதரர்களான கவுரவர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள் இந்தக் கோவிலைக் கட்டியதாக கூறப்படுகிறது.
கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அவற்றைச் சுற்றி கோவில் எழுப்பப்பட்டுள்ளது.கடல் சீற்றங்கள் மூலம் கோவில் படிப்படியாக சிதிலமடைந்து வருவதாகவும் கொடிமரம் மட்டும் அப்படியே புதிதாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடலுக்குள் 1 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோவிலுக்கு செல்வது என்பது சாதாரணமான விசயம் இல்லை என்றாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை.
இவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.
தகவல்: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி







