தனியார் நிறுவன மேற்பார்வையாளர், விபத்தில் பலி
கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி திருமங்கை நகரில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன் மகேஸ்வரன் (வயது 45). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் மதுரை- நெல்லை நாற்கர சாலை சர்வீஸ் ரோட்டில் இருந்து மூப்பன்பட்டி விலக்கு ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் ரத்தினபுரியை சேர்ந்த வீரபோஸ் மகன் கவுதமவர்மன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான மகேஸ்வரனுக்கு வள்ளியம்மாள் (42) என்ற மனைவியும், பேராச்சி (17) என்ற மகளும், ஆதவன் (11) என்ற மகனும் உள்ளார்கள்.







