கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு இரவு நேரத்தில் வெளியூர் பஸ்கள் வந்து செல்லாவிட்டால் சிறைபிடிக்கும் போராட்டம்; தமிழ் மாநில காங்கிரஸ் அறிவிப்பு

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.ராஜகோபால், இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். காதில் பூ சுற்றிக்கொண்டு அவரும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேப்பரை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர்.
பின்னர் கோட்டாட்சியர் ஜெயாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்காக கூடுதல் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்த போது ஊரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் இருந்தும், இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்டது.
கோவில்பட்டி நகரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கூடுதல் பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையம் 3.64 ஏக்கரில் ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே 2007-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புகள் தொடரவே, அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் , அதன் பிறகு வந்த ஆட்சியர் பழநியாண்டி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில், இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை தொலைதூரம் செல்லும் அனைத்து பஸ்களும் கோவில்பட்டி ஊருக்குள் உள்ள அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய கூடுதல் பஸ் நிலையம் வரை 24 மணி நேரமும் சுற்றுப்பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அதிகாரிகளால் செயல்படுத்தப்படவில்லை. இதனால், வெளியூர் செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் புதிய கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து இயங்கின. இரவு நேரத்தில் இயக்கப்பட்ட சுற்றுப்பேருந்துகள் வருமானம் இல்லை என்று கூறி, போக்குவரத்துக்கழகம் நிறுத்திக் கொண்டது.
இதனால் பொதுமக்கள் ஆதரவு குறைந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்கள் மட்டும் புதிய கூடுதல்பஸ்நிலையத்துக்கு முன்புள்ள அணுகு சாலையில் நின்று செல்கின்றன. அதிகாலை நேரத்தில் நான்குவழிச்சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றன. இந்த நிலை கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.

இதில் முற்றிலும் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டதால், புதிய கூடுதல் பஸ்நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் வீடுகளுக்கு வர மக்கள் ரூ.200 முதல் ரூ.300 வரை ஆட்டோக்களுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மதுரையில் இருந்து கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்துக்கு ரூ.110 பேருந்து கட்டணம் கொடுத்து வந்து, அங்கிருந்து வீட்டுக்கு ரூ.250 வரை ஆட்டோவுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலையில் எழை எளிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கூடுதல் பஸ் நிலைய பகுதியில் போதுமான நேரம் போலீசார் ரோந்து செல்வதும் கிடையாது. அங்கு புறக்காவல் நிலையமும் இல்லை. பிறகு எப்படி எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.
எனவே, இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கோவில்பட்டி வழியாக செல்லும் அனைத்து தொலைதூர பஸ்களும், ஊருக்குள் உள்ள அண்ணா பஸ்நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்ந்து வராத நிலை ஏற்பட்டால் கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மறியல் போராட்டமும், ஊருக்குள் வராத பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டமும் நடத்துவது என்ற முடிவினை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்
இதனைப் போன்று தற்போது உள்ள மாவட்ட ஆட்சியரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்து மற்ற பஸ்கள் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் தொடர்ந்து இயக்காமல் பொதுமக்கள் காதில் பூச்சூற்றும் நிலையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த மனு அளிக்கப்படுகிறது.,
மேற்படி கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்ந்தால் ஆகஸ்டு 1ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு மாட்டு வண்டி மூலம் பயணிகளை அழைத்துச் செல்வது என்பதையும் தங்களின் மேலான கவனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனை போன்று 3.8.2023 -க்குள் அனைத்து பஸ்களும் அண்ணா பஸ் நிலையம் வந்து செல்லாத நிலை ஏற்பட்டால் வராத பஸ்களை சிறை பிடித்தும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
