கோவில்பட்டியில் 20 அடியாக சுருங்கிய சாலைகள்: விபத்துகளை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா மனு

கோவில்பட்டி நகரப்பகுதியில் விபத்துகளை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கி.வைரம், மாவட்ட துணை தலைவர்கள் பி.முத்துசாமி, கே.திருமுருகன், கோமதி சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் வி.எஸ்.ஏ.சுப்புராஜ், வட்டார தலைவர்கள் கனிராஜ், முத்துப்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமாறன், வட்டாரத் துணைத் தலைவர்கள் தங்கராஜ், சச்சின் உள்ளிட்டோர் கோவில்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு பழங்கள், பூ, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை தாம்பூல தட்டில் வைத்து எடுத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் உதவி கோட்ட பொறியாளர் ரத்தினபாபுவிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 60 அடி சாலைகள் 20 அடியாக குறைந்து விட்டது. ஆக்கிரமிப்புகள் காரணமாக நாள்தோறும் கோவில்பட்டி நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியபோதும் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறது. மக்களின் உயிர்கள் முக்கியமில்லை தங்களுடைய சுயலாபம் தான் முக்கியம் என அதிகாரிகள் நினைப்பதாக மக்களிடைய சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இருக்க வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற காலம் தாழ்த்தினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







