மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ எம்.பி.சந்திப்பு; திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வலியுறுத்தல்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை துரை வைகோ எம்.பி. டெல்லியில் சந்த்தித்து பேசினார்/. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.அப்போது, திருச்சிக்கு மிக முக்கியமான தேவையாக உள்ள உலர் துறைமுகம் (Dry Port / Inland Container Depot – ICD) அமைக்க வேண்டும் என்ற எனது நீண்டகால கோரிக்கையை நினைவூட்டி, மீண்டும் எடுத்துரைத்தேன்.

திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, நான் முன்பு 21.8.2025, 1.12.2025 மற்றும் 17.3.2026 ஆகிய தேதிகளில் அனுப்பிய மனுக்களை மேற்கோள்காட்டி எனது கோரிக்கையை மீண்டும் எடுத்துரைத்தேன்.
இந்த விவகாரத்தில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் பொருளாதார அவசியத்தை வலியுறுத்தினேன்.
இதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளதையும், மேலும், நாட்டில் உலர் துறைமுகங்கள் அமைப்பதற்கான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் வழங்கிய தகவல்களையும் சுட்டிக்காட்டினேன்.
சமீபத்தில் நிதி அமைச்சகத்திலிருந்து வந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, எனது விளக்கத்தை விரிவாக எடுத்துரைத்தேன். நான்கு முக்கிய அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டிய இந்த உலர் துறைமுகத் திட்டத்திற்கு நிதித்துறையின் முக்கிய பங்களிப்பு அவசியம் என்பதால், மீண்டும் தங்களை சந்தித்து இந்த விஷயத்தை நினைவூட்டுகிறேன் என்று தெரிவித்தேன்.

இந்த உலர் துறைமுகம் அமைக்கப்படுமானால், திருச்சிக்கு மட்டுமல்லாமல் மத்திய தமிழ்நாட்டின் முழுமையான தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் என்பதை வலியுறுத்தினேன்.மேலும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்து விமான நிலைய ஆணையத் தலைவரிடம் நான் ஏற்கெனவே வைத்துள்ள கோரிக்கையையும் தெரிவித்து, தாங்களும் அதற்கான உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
இரு கோரிக்கைகளையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட நிதி அமைச்சர், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.
y







