மே 3-ந்தேதி 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்: நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவ- மாணவிகள் தயாராகி வருகிறார்கள். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 2 கோடி ரூபாய் வரை செலவிடும் நிலை உள்ளது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 25 ஆயிரம் மட்டுமே ஆண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதுவதில் மாணவ- மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மே மாதம் 3-ந்தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வினை 28 லட்சம் மாணவ- மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 2 லட்சம் பேர் எழுதுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) நாளை வெளியிடப்படுகிறது. neet.hta.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும் நுழைவுச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த நுழைவுச்சீட்டில் தேர்வர்களின் பெயர் மையத்தின் முழு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெறும். நீட் தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் சிரமம் இல்லாமல் எழுதுவதற்கு விரிவான ஏற்பாடு நடக்கிறது.







