துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடும் தாக்கு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை 10 மணியளவில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1975-ம் ஆண்டில் கோவையில் நடந்த முதல் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி எம்.ஜி.ஆரின் பாராட்டை பெற்றவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராது பணியாற்றினேன். ஜெயலலிதா வழியில் கட்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு பயணித்தவன். அ.தி.மு.க.வுக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன். கட்சி உடைந்து விட கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பேத என்னுடைய நோக்கமாக இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு 2 முறை வாய்ப்பு கிடைத்தும் கட்சி உடைந்து விட கூடாது என்பதற்காக விட்டு கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமியை பரிந்துரைத்தேன்.
எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் 2019, 2021 உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஒரு முறை கூட வெற்றி பெறாதவர்.
நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன். கட்சி ஒன்றிணைய தொடர்ந்து வலியுறுத்தினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்கி, யாரை சேர்க்க வேண்டுமென பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்றேன்.

கட்சி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அதுவே எனது நோக்கம். எம்.ஜி.ஆர் தோல்வி காணாதவர். ஜெயலலிதா ஒரு முறை தோற்றால், மறுமுறை வெற்றி காணும் சாதனையாளர். கட்சியை வலிமைப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டுமென்று நீக்கப்பட்டவர்களோடு பேசினேன்.
கருத்து கூறியதும் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். என்னை பி டீம் என்கின்றனர். யார் பி டீம் என நாடறியும். நான் பி டீமில் இல்லை. ஏ1ல் பழனிசாமி இருக்கிறார். ஏ1 ஆகவே பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கட்சியில் இருந்து நீக்கியது வேதனையாக உள்ளது. மனவேதனையில் இருக்கிறேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. 53 ஆண்டுகள் கட்சியில் இருந்த சீனியர் என்ற வகையில் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஒரு மூத்த தலைவரான எனக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.
2026-ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே கூறவில்லை என கேட்டு விட கூடாது என்பதற்காகவே கூறினேன். யார் துரோகம் செய்தது? எங்களிடம் எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளது. என் மீது களங்கம் சுமத்தப்பட்டு இருப்பது வேதனை ஏற்படுத்துகிறது.
பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருகிறார். துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம். என்னை குற்றம் சாட்டும் முன்பு, குற்றம் செய்தவர்கள் யார் என்று தெரிந்து செய்திருக்க வேண்டும். கொடநாடு கொலை வழக்குக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினாலும், விதியின்படி நீக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். அவர், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.







