ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா: சிபிஐ வழக்கு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையவாங்கியது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன் ரூ. 1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

இதனிடையே, காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் தற்போது சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில், 2017 ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது, சர்க்கரை ஆலை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை ஆலையை நிர்வகித்து வந்த ஷிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த வாக்குமூலத்தில், சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு ரூ. 450 கோடி பழைய நோட்டுகளை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்து என அறிவித்திருக்கும் வருமான வரித்துறை, உண்மையான உரிமையாளர் சசிகலா என அறிவித்துள்ளது. இதனடிப்படையில், சர்க்கரை ஆலை நிர்வாகிகள் அனைவரின் பெயரையும் சிபிஐ காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.







