கோவில்பட்டி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 3 பெண்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டையபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற மசாஜ் சென்டர் செயல் பட்டு வருகிறது. இதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடந்தது உறுதியானது. இதையெடுத்து அங்கிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (59), மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 3 பெண்களை மீட்டு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மேலும் பல ஊர்களில் இது போல் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.







