நம்பிக்கையிலா தீர்மானம்: ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராஜூ துணைத்தலைவராக உள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் உமா மகேஸ்வரியும், அதிமுக முத்துலட்சுமியும் தலா 15 வாக்குகள் பெற்றனர். சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தேர்வானார். அவர் நகர்மன்ற தலைவராக தேர்வானது முதற்கொண்டே அவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது, இதனால் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது,

சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 கவுன்சிலர்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரிக்கு எதிராக நிற்கும்படி உமா மகேஸ்வரியின் நடவடிக்கை இருந்தது.
சங்கரன் கோவில் நகராட்சியில் கடந்த பல மாதங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். நகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தலைவர் செவி சாய்க்க வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது,
நகராட்சி கூட்டங்களிலும் இந்த மோதல் எதிரொலித்து வந்தது. அடிக்கடி உமா மகேஸ்வரியுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வந்தனர்.

இந்த விவகாரம் வலுத்துக்கொண்டே சென்றதால் திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் சுயேட்சைகள் என்று எல்லோரும் ஒன்றுகூடி கடந்த 2023 ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது திமுக தரப்பில் தலையீடு இருந்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதனால் அன்றைக்கு உமா மகேஸ்வரி பதவி தப்பியது
ஆனாலும், இந்த மோதல் போக்கு நீடித்தது. இதனால் 26 கவுன்சிலர்கள் ஒன்று கூடி, உமா மகேஸ்வரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் கடந்த மாதம் 2ஆம் தேதி அன்று மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் அப்போது ஆணையாளர் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, நேற்று சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 29 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். ஒரே ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது. வாக்கெடுப்பில் 28 ஆதரவு வாக்குகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. உமா மகேஸ்வரி பதவியை இழந்தார்.
ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி பதவியை இழந்துள்ளார் உமா மகேஸ்வரி.







