கோவில்பட்டியில் நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு:மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 33 பேர் கைது

நாட்டின் 78-வது சுதந்திரத் தினத்தையொட்டி கோவில்பட்டியில் பாஜகவினர் தேசிய கொடியுடன் இலக்குமி ஆலை மேம்பால பகுதியில் இருந்து பிரதான சாலை வழியாக செண்பகவல்லி அம்மன் கோvவில் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்வோம் என பாஜகவினர் தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாஜகவினர் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் திரண்டனர்.
அவர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி, நடைபயணத்தை தொடங்க முற்பட்டனர். அப்போது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
