கோவில்பட்டியில் அஞ்சல் சிறப்பு கண்காட்சி

1942-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நினைவு கூரும் வகையில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சிறப்பு கண்காட்சி நடந்தது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ராணுவ அஞ்சல் சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினட் கர்னல் சுந்தரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்டம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை அஞ்சல் தலைகளோடு இணைத்து எடுத்துரைத்தார்.
கண்காட்சியில், சுதந்திர போராட்ட வரலாறு, மகாத்மா காந்தி குறித்து வாழ்க்கை வரலாறு மற்றும் அவரை கவுரவித்து பல்வேறு நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகள் இடம் பெற்று இருந்தன.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், முதலாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்கள், முப்படைகள், மத்திய காவல் துறை, விளையாட்டு ஆகியவை குறித்து வெளியிடப்பட்ட பல்வேறு வகையான அஞ்சல் தலைகள், மகாத்மா காந்தியை கவுரவித்து இங்கிலாந்து அரசு கடந்த 2021-ல் வெளியிட்ட 5 பவுண்ட் சிறப்பு நாணயம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
