சென்னையில் இருந்து கோவில்பட்டி வந்த கார் விபத்தில் 5 பேர் பலி : உருக்கமான தகவல்
திருச்சி – மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை கோயம்பேடு பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (55), உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி (51). இவர்களது மகன்கள் பாலாஜி (31) மற்றும் ஸ்ரீராம் (27). பாலாஜியின் மனைவி ஐஸ்வர்யா, ஸ்ரீராமின் மனைவி ரஞ்சனா. ஸ்ரீராம் – ரஞ்சனா தம்பதிக்கு பிரணிகா ஸ்ரீ என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது.

பாலாஜியின் மனைவி ஐஸ்வர்யா பிரசவத்திற்காகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கருப்பூருக்கு சென்றிருந்தார். அவருக்கு நள்ளிரவில் குழந்தை பிறந்ததையடுத்து, குழந்தையைப் பார்ப்பதற்காகக் கனகராஜ், ராஜகுமாரி, ஸ்ரீராம், ரஞ்சனா மற்றும் குழந்தை பிரணிகா ஸ்ரீ ஆகியோர் காரில் புறப்பட்டனர். காரை ஸ்ரீராம் ஓட்டினார்.
முன்னதாகப் பேருந்தில் சென்ற பாலாஜி, வழியில் காரில் வந்த தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் இணைந்து பயணம் செய்தார்.
அதிகாலையில் திருச்சி – மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் தும்பைப்பட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் மேலூர் சந்தைக்கு ஆடு வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த முருகன் (55) மற்றும் மற்றொரு முருகன் (40) ஆகிய இருவர் சென்ற வாகனம் மீது கார் உரசியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்து பலமுறை உருண்டு நொறுங்கியது. அந்த நேரத்தில் எதிரே மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த மற்றொரு காரும் இந்த விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த ராஜகுமாரி, மகன்கள் பாலாஜி, ஸ்ரீராம், ஸ்ரீராமின் மனைவி ரஞ்சனா மற்றும் குழந்தை பிரணிகா ஸ்ரீ ஆகிய 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். கனகராஜ் படுகாயங்களுடன் உயிருக்குக் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

தகவலறிந்து வந்த போலீசார், கனகராஜை ம மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மற்றொரு காரில் வந்த பிரகாஷ் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு முருகன்களும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







