ஆடிப்பட்டம் சாகுபடிக்காக காய்கறி விதை தொகுப்பு விநியோகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.20க்கு 6 வகை காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காய்கறி விதைத் தொகுப்புகளை விநியோகித்து ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது:
தோட்டக்கலைத் துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
இதில் தக்காளி, கீரை வகைகள், கத்தரி, புடலை, தட்டைப்பயிறு மற்றும் கொத்தவரை ஆகிய 6 வகையான விதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விதைத் தொகுப்பு ரூ.20 என்ற சலுகை விலையில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

இந்த விதைத் தொகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் நேரில் அணுகி விதைத் தொகுப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுபா வாசுகி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உதவி இயக்குநர்கள் அலெக்ஸ் ஐசக், தங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.







