கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான ஆணை வழங்க உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால் தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது வேறு, அரசு வேலை வழங்குவது முற்றிலும் வேறானது என்று தெரிவித்துள்ள பெ.சண்முகம், பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும் என்றும், அதுவரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.







