திமுக தேர்தல் வாக்குறுதி தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது; கனிமொழி எம்.பி. பேட்டி
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.கூறியதாவது :-

தூத்துக்குடியைப் பொறுத்தவரை, கீதா ஜீவன் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்று என்னால் சொல்ல முடியும். காரணம், தொடர்ந்து மக்கள் பணியை செய்து வரும் ஒருவர்; தொகுதி மக்களுடன் பரிச்சயம் உடையவர். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளிலும், அமைச்சராக அவர் செய்துள்ள பல பணிகளிலும், நமது முதல்வருக்கு பெருமை சேர்த்த வகையில் பணிகளை செய்து இருக்கிறார்.
திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாகவும், முக்கியமான பெண்களுக்கான, பெண்களை உயர்த்தக்கூடிய ஆட்சியாக அமைந்துள்ளது. இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடக்கூடிய பல்வேறு தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து வேலை வாய்ப்பை உருவாக்கிய ஆட்சியாக அமைந்துள்ளது.
மற்ற தேர்தல் அறிக்கையை மக்கள் திரும்பி கூட பார்க்காத சூழலில், திமுக தேர்தல் அறிக்கை கொண்டாட கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திமுக எந்த வாக்குறுதியை தந்தாலும் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.

நம்முடைய முதல்வர் தேர்தல் நேரத்தில் தந்து இருக்கக்கூடிய வாக்குறுதிகளை மக்கள் ஆவலோடும், திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விரைவில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமையப் போகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் குற்றங்கள் குறைவாக உள்ளது. குற்றங்கள் நடந்தால் கூட அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி. விரைந்து நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை விட, நிச்சயமாக தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாக உள்ளது. அவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள் தவறு செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றினர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இன்று குற்றம் செய்யக் கூடியவர்களுக்கு எப்படி மிக விரைந்து தண்டனை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்
தொடர்ந்து, முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கி, கனிமொழி கருணாநிதி எம்.பி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.







