புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் திடீர் கட்டண உயர்வு; லாரி உரிமையாளர்கள் மறியல் போராட்டம்
Oplus_16908288
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில், உள்ளூர் லாரிகளுக்கு திடீரென கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர் லாரிகளுக்கு, இந்தச் சுங்கச்சாவடியில் இதுவரை சலுகை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இரவு முதல் திடீரென ஒருமுறை சென்று வர ரூ. 585 என நிர்ணயித்து, இரண்டு முறைக்கு (Round Trip) ரூ. 1,270 வரை வசூலிக்க சுங்கச்சாவடி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்தத் திடீர் கட்டண உயர்வால் அதிருப்தியடைந்த தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாகத் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விதிமுறைகளை மீறி இந்தச் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறையினால் 5 நுழைவுப் பாதைகளில் 2 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் வழக்கமாகவே இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இறுதியில் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.







