தூத்துக்குடி உப்பளங்கள் சீரமைக்கும் பணி
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்
ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள்தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு சுமார் 19 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பததியானது.

குறைவாக உற்பத்தி செய்யப்பட்டாலும் தமிழகத்தில் உப்பு விலை உயரவில்லை. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களையும் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்யவில்லை இதனால், உப்பளங்களில் தேங்கியிருந்த ஜிப்சத்தை அகற்றும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். தற்போது, உப்பளங்களில் குவிந்துள்ள மணல் குவியல்களை அகற்றுதல், கரைகளை சீரமைத்தல், ஆழ்துளைக் கிணறுகளை சரி செய்தல், பாத்திகளில் உப்புநீர் நிரப்புதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இப்பணிகள் முடிவடைந்து உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு மார்ச் மாதமாகிவிடும். எனவே, நடப்பாண்டு மார்ச் முதல் வாரத்திலேயே உப்பு உற்பத்தி முழு அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைந்த நிலையில், இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது வரும் மாதங்களில் நிலவும் வானிலையைப் பொறுத்தே அமையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்,.







