கல்லூரி மாணவர்களின் ஆலய தூய்மை பணித் திட்டம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஆலய தூய்மை பணித் திட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பராபுரத்தில் அமைந்துள்ள அறியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் இந்த துப்புரவு நடவடிக்கை நடைபெற்று, கோவில் சுற்றுப்புறக் குப்பைகள் அகற்றுதல், புல் வெட்டுதல், நடைபாதைகள் சுத்தம் செய்தல், மற்றும் வளாக அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு காரணமாக கோவில் வளாகம் புத்தொளி பெற்றது.

நிகழ்ச்சியை கல்லூரித் தாளாளர் விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்களை சமூக நல்வாழ்வுக்காக செயலாற்றும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஊக்கமளித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி கலந்து கொண்டு நிகழ்வின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் கீதாராணி மாணவர்களை வழிநடத்தி, துப்புரவு பணிகள் எவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் செய்யப்படவேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கினர். மொத்தம் 62 , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தன்னார்வ சேவையை வெளிப்படுத்தினர்.

சமூக நலன், தூய்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாணவர்கள் ஆற்றிய இந்த சேவைப் பணிகள் உள்ளூர்வாசிகளின் பாராட்டையும் பெற்றது.







