டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் கண் துடைப்பு.; கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தனியார் வசமிருந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்து அதனடிப்படையில் கடந்த 2004ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில வாணிபக் கழகம் மூலம் கடந்த 21 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே நடத்திவருகிறது.
இதன் மூலம் அரசுக்கு நிதி வருவாய் பல ஆயிரம் கோடி ரூபாய் பெருகியது. டாஸ்மாக் கடைகளில் மதுபானக் கூடங்கள் உள்ளன. இக்கூடங்களில் மது அருந்துவோருக்கு நொறுக்கு தீனிகள் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கூடங்கள் இல்லாத கடைகளில் மதுப் பிரியர்கள் மதுபாட்டில்கள் வெளியில் வாங்கிச் சென்று விருப்பப்பட்ட குளம், குட்டை கரைகள், மரத்தடி நிழல், விவசாய நிலங்கள் ,பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

மது அருந்திவிட்டு அவ்விடத்திலேயே காலி பாட்டில், டம்ளர், நொறுக்கு தீனி காலி கேரி பைகள் விட்டுச்செல்கின்றனர். சிலர் அப்பாட்டில்களை பொறுப்பற்ற முறையில் மற்றவர்கள் பாதிக்கும் அளவிற்கு கண்ணாடி பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் பனி செய்யும் போது, மற்றும் நீர் நிலைகளில் குளிக்கும் போது, கால்நடைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்கும்போது உடைந்த கண்ணாடி பாட்டில்கள் காலில் குத்தி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் திறந்த வெளியில் ஆங்காங்கு காலி மதுப்பாட்டில்கள் உடைந்து கிடப்பதால் காலணியின்றி நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.. சில சமயங்களில் பாட்டில் குத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை கூட ஏற்படுவதுண்டு.

இதனை கருத்தில் கொண்டு காலி மதுபாட்டில்களை அரசு மதுக்கடைகளில் சேகரிக்க வேண்டும் அல்லது கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் கசிவு ஏற்படாத அட்டைகளில் மது அடைத்து விற்பனை செய்ய வேண்டும்.என்று பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களை தொடர்ந்து மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன் முன்னோட்டமாக முதலில் மதுரை உட்பட 10 மாவட்டங்களில் முதல் கட்டமாகவும் படிப்படியாக பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த முடிவெடுத்து மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
காலி பாட்டில்களை திரும்பக் கொடுத்து விட்டு 10 ரூபாய் திருப்பி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இவ்வறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மதுபாட்டிலில் 10 ரூபாய்க்கான ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது.
காலி பாட்டிலுடன் ஸ்டிக்கரையும் சேர்த்து கொண்டு வர வேண்டும் என கடையில் உள்ளபணியார்கள் கூறுகின்றனர். ஆனால் மதுக்கடையுடன் சேர்ந்த மதுக்கூடத்தில் பாட்டிலில் ஓட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை மட்டும் கொடுத்தால் போதும். ரூபாய்க்கு பதிலாக நொறுக்கு தீனியை கொடுக்கின்றனர்.

அரசு நல் எண்ணத்துடன் காலி பாட்டில் திரும்பப் பெறும் முயற்சியை மதுக்கூடங்கள் நடத்துவோர் சீர்குலைக்கின்றனர். காலிபாட்டில்களை திரும்பத் தராமலேயே ஸ்டிக்கரை திருப்பிக் கொடுத்தாலே மதுக்கூடத்தில் 10ரூபாய்க்குரிய நொறுக்கு தீனி கொடுப்பதால் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் கண் துடைப்பு திட்டமாகி விட்டது.
மதுக்கடைகளில் மட்டுமே காலி பாட்டிலுடன் கூடிய ஸ்டிக்கருக்கு 10 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுக்கூடங்களில் காலி பாட்டில் மற்றும் ஸ்டிக்கருக்கு பணம் தரக்கூடாது.
அரசு உத்தரவை மீறி மதுக்கூடத்தில் ஸ்டிக்கர் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வலியுறுத்தி உள்ளார்.







