தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 18 மாணவ, மாணவிகள் விமான பயணம் ; தலைமை ஆசிரியர் சொந்த பணத்தில் ஏற்பாடு
தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இவரிடம் கடந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. ஆனால் நாங்கள் அதில் ஏற இயலுமா என்று கேட்டு இருக்கிறார்கள்.
இதனால் அவர் 18 மாணவர்களை தனது சொந்த செலவில் அழைத்துக்கொண்டு கடந்த வருடம் சென்னைக்கு விமானத்தில் சென்றார்.
அதே போல் இந்த வருடம் தன்னிடம் படித்து விட்டு சென்ற பழைய மாணவர்கள் நாங்களும் உங்கள் மாணவர்தானே. எங்களுக்கு விமான பயணம் கிடைக்காதா? என்று கேட்க, பழைய மாணவர்கள் 8 பேர் மற்றும் தற்போது படிக்கும் மாணவர்கள் 10 பேர் என 18 மாணவர்களுடன் இன்று (சனிக்கிழமை) விமானத்தில் சென்னை அழைத்துச் சென்றார்.

தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் இடைநிலை ஆசிரியை மாரிச்செல்வி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உடன் சென்றனர்.
காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் சிறப்புரையாற்றி மாணவர்களை வழியனுப்பி வைத்தார். தூத்துக்குடி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தெட்சணாமூர்த்தி, தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா ஆகியோர் விமானத்தில் ஏறியவுடன் முத்தாலங்குறிச்சி காமராசு, தான் எழுதிய தாமிரபரணி வரலாற்றில் முதல் முதலில் வெளிவருகின்ற நாவலான நீர்மம் குறித்து மாணவர்களிடம் அறிமுகம் செய்தார்.
காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தினை விமானம் சென்றடைந்தது. மாணவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.. அதன்பின் மாணவர்கள் மெட்ரோ ரெயிலில் விமானநிலையத்தில் இருந்து நந்தனத்திற்கு பயணம் செய்தனர்.
தொடர்ந்து 10 மணிக்கு அண்ணா நூலகத்தினை பார்வையிட்டனர். அங்கு ஊடகவியலாளரும், பேச்சாளருமான கோபாலகிருஷ்ணன் மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து மாணவர்கள் கோளரங்கத்தினை கண்டு களித்தனர் . அங்கு சென்னை இந்துஸ்தான் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கா.அபிஷ்விக்னேஷ் மாணவர்கள் உரையாடல் நடந்தது.

தொடர்ந்து சென்னை சிப்காட் அலுவலகத்தில் வைத்து அதன் இயக்குனர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல் முடிந்ததும், மாலை 4 மணி அளவில் கன்னிமாரா நூலகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் ஆதிச்சநல்லூர் பொருள்களை பார்வையிடுகிறார்கள். காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து தோரணமலை முருகன்கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மாணவர்களை சந்தித்து பயணங்கள் குறித்து உரையாற்றுகிறார். அதன் பின் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாணவர்கள் தூத்துக்குடி திரும்புகிறார்கள்.
. மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மனதை மகிழ வைக்கும் விதமாக விமான பயணத்தினை ஏற்படுத்தி தந்த நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளும் இவரை பாராட்டி வருகிறார்கள்.







