தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் ; உப்பு ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் இருந்தும் அதிக அளவில் வர்த்தக நோக்கத்துடன் பெருமளவு தொழில் முனைவோர்கள் சென்னை சென்று வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருவதால் சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.
லோக்மான்ய திலக் – மதுரை வாராந்திர ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்கு இரவு நேர ரெயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா பயணிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மெமு ரெயில்கள் இயக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தினமும் தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







