தூத்துக்குடி மாவட்ட கனமழையின் போது மீட்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்ட முழுமைக்குமான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்டவைகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட உள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம்? எப்படி பருவமழைக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற முறையில் அனைத்து அரசு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து அலுவலர்களும் பணியில் இருக்கவும், ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான பொறுப்புகள் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் தயார் நிலையில் இருக்கவும், பிரச்சனைகள் உள்ள இடங்கள் குறித்தும், மணல் மூட்டைகள், ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் எங்கெல்லாம் என்ன குளங்கள் இருக்கின்றது? எவ்வளவு நிரம்பியிருக்கின்றது மற்றும் என்ன நிலையில் இருக்கின்றது? குளங்களின் கரைகள் உடையாத அளவிற்கு, தண்ணீரை வெளியேற்றுவதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநகராட்சியில் ஏற்கனவே 38 பம்ப் ரூம்கள் உள்ளது. தண்ணீர் வெளியேற்றக்கூடிய பம்ப்களும் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் வட்டார பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, கனமழை தொடரும் பொழுதும் அல்லது மிக கனமழை ஏற்படும் பொழுதும் அந்த நிலைமைகளை சந்திப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







