தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: ஆட்சியர் இளம்பகவத் 430 மனுக்கள் பெற்றார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (22.09.2025) நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 34 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 16,199/- மதிப்பிலான திறன்பேசிகளையும் (Smartphone), இரு கால்களும் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் செயற்கை அவயங்களையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக 8 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தமிழரசி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







