பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் சிக்கினார்
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்தார்
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சென்று அழகுசாதன பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்கு ஷாசாத் கடத்தி வந்துள்ளார். இந்த கடத்தலின்போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் ஷாசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் உள்பட முக்கிய இடங்கள் குறித்த தகவல்களை ஷாசாத் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. க்கு அனுப்பியுள்ளார். மேலும், உத்தரபிரதேசத்தில் இருந்து மேலும் பலரையும் ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்ற ஷாசாத் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், ஷாசாத்தை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷாசாத்திற்கு பாகிஸ்தான் விசாவை ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பினர் எடுத்துக்கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.









