கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவகால ஸ்கேன் எடுக்கும் வசதி; ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரத்ததான கழக நிறுவனர் காளிதாஸ் தலைமை தாங்கினார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகுத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. ராஜேந்திரன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், ஜீவா அனுக்கிரகா ராஜேந்திரன், மகேஸ், பகத்சிங் இரத்ததான கழக செயலாளர் சண்முகராஜா, பொருளாளர் குருஜி, நிர்வாகிகள் செண்பகராஜ், லட்சுமணன், வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-
*கோவில்பட்டியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சையினை காலதாமதமின்றி செய்ய வேண்டும்.
* மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.
* மருத்துவமனை வளாகத்திற்குள் தரமான சாலை வசதி செய்து தரவேண்டும்.
* தீக்காயங்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்திட சிறப்பு சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மஞ்சள் காமாலை மற்றும் வலிப்பு நோய் மருந்துகள் தடையின்றி கிடைக்க வேண்டும்.
* பிரசவகால ஸ்கேன் எடுத்திட மருத்துவமனை வளாகத்திற்குளேயே பிரசவ கால ஸ்கேன் எடுக்கும் வசதி செய்து தரவேண்டும்.
* தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
