கோவில்பட்டியில் அரசு அலுவலக சாலையை சீரமைக்ககோரி கலெக்டரை சந்திக்க முற்பட்ட தமாகா மாவட்ட தலைவர் கைது

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், புள்ளியல் துறை, கருவூலகம், டி.எஸ்.பி அலுவலகம் ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றங்கள், போக்குவரத்து காவல் அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
வேலை நாட்களில் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். இந்த அரசு அலுவலக சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தி தமாகா கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜமாபந்தியின் போதும் மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, நேற்று அரசு விழாவில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வந்த தகவலை அறிந்த தமாகா கட்சியினர் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் அவரை சந்திக்க முற்பட்டனர்.
வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகரச் செயலாளர் செண்பகராஜ், வட்டார செயலாளர் தங்கராஜ் ஆகியோர் அரசு அலுவலக நுழைவு பகுதிக்கு கட்சி கொடியுடன் திரண்டு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். வழியில் நிறுத்தி மனு அளிக்க அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால், கண்டிப்பாக மனு அளிப்போம் என தமாகாவினர் தெரிவித்ததுடன் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் கே.பி.ராஜகோபால் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் பெய்த மழையில், அரசு அலுவலக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்றுவிட்டு, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் கார்கள் குண்டு குழியுமாகி தண்ணீர் தேங்கிக்கிடக்கும் அரசு அலுவலக சாலை வழியாக வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
