11 பெரிய துறைமுகங்களில் 28 ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம்; தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
தூத்துக்குடி துறைமுக விருந்தினா் மாளிகையில் துறைமுக தொழிலாளா் கூட்டமைப்பு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. தேசிய துறைமுக தொழிலாளா்களின் கூட்டமைப்பு தலைவா் முகமது ஹனீப் தலைமை வகித்தாா். இக்கூட்டத்திற்குப் பின்னா் முகமது ஹனீப், ஹெச்எம்எஸ் தொழிற்சங்க பொதுச்செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி, சென்னை, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி என நாட்டின் 11 பெரிய துறைமுகங்களில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா்.
இவா்களுக்கான புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர வேண்டிய நிலையில் தற்போது வரை வரை ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமாகவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஒப்பந்த கமிட்டி கூட்டம் 7 முறை நடைபெற்றும் முடிவு எடுக்கப்படாமல் மத்திய கப்பல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, துறைமுக தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதிய உயா்வு மற்றும் பணப் பலன்களை வழங்காத மத்திய கப்பல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து வரும் 12ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் உள்ள 11 பெரிய துறைமுகங்களில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.
தொடா்ந்து 28ம் தேதி முதல் 11 பெரிய துறைமுகங்களில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
