ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 10-ந் தேதி நடக்கிறது; காவல் கண்காணிப்பாளர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இத்தேர்வு வருகிற 10.11.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.







