யூடியூப் மூலம் பணக்காரரான லாரி டிரைவர்; “இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான டிரக்” உருவாக்கினார்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. டிரைவரான இவர், தனது நீண்ட தூரப் பயணங்களின் போது நெடுஞ்சாலை ஓரங்களில் அவரே சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்ற உணவுகளைச் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை அவரது மகன் சாகரின் உதவியுடன் ‘ஆர் ராஜேஷ் விலாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் வீடியோவாகப் பதிவிடத் தொடங்கினார். அவரது சேனல், கிட்டத்தட்ட 3 மில்லியன் சந்தாதாரர்களையும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது. தனது டிரைவர் பணியிலிருந்து மாதத்திற்கு சுமார் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதித்தார். யூடியூப் உள்ளடக்க உருவாக்கத்தின் மூலம், அவரது மாத வருமானம் 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது, சில சமயங்களில் ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டது.

தனது யூடியூப் வருமானத்தைப் பயன்படுத்தி, ராஜேஷ் நொய்டாவில் உள்ள கஸ்டமைசேஷன் நிபுணர்களான ப்ரோ கேம்பருடன் இணைந்து, “இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான டிரக்” என்ற தனது கனவுத் திட்டத்தை வடிவமைத்து நிறைவு செய்தார். செப்டம்பர் 2026-ல் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட இந்த கஸ்டம் வாகனத்தின் உட்புற மாற்றங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை செலவானது. இந்த கட்டமைப்பு, ஒரு சாதாரண சரக்கு வாகனத்தை, சக்கரங்கள் கொண்ட ஒரு உயர்தர இல்லமாக திறம்பட மாற்றுகிறது.
இந்த வாகனம் முழுமையாக குளிரூட்டப்பட்ட (ஏசி) அறை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறை மற்றும் மென்மையான உள் அலங்கார இருக்கைகள் ஆகியவைகள் முக்கிய அம்சங்களாகும். முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொலைக்காட்சி, ஒரு குளிர்சாதனப் பெட்டி, மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஏராளமான சேமிப்பு அலமாரிகளும் அமைந்துள்ளன.
நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணத்தின்போது ஏற்படும் உடல் சிரமத்தைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு டிரைவர் இருக்கைகளும் உள்ளன. மேலும் வாகனத்தின் உள்ளிருந்தே தனது தனித்துவமான உணவு விலாக்ஸை வசதியாக தொடர்ந்து படமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக சமையல் இடமும் உள்ளன.
சாமானிய டிரைவராக இருந்து, இன்று இந்தியாவின் காஸ்ட்லி லாரிக்கு சொந்தக்காரராக மாறியுள்ள ராஜேஷ் ரவானியின் கடின உழைப்பைப் பாராட்டி, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “
முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம்” என்பதற்கு ராஜேஷ் ரவானியே மிகச்சிறந்த உதாரணம் என்று நெட்டிசன்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.







