தூத்துக்குடியில் கப்பல்கட்டும் தளத்துக்கான இடம் தேர்வு: உப்பள உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
தூத்துக்குடி, முள்ளக்காடு கோவளம் கடற்கரைப் பகுதியில் கோவளம் பசுவந்தரை தண்பாடு சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கர் அரசு குத்தகை நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு உப்பு உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இத் தொழிலை நம்பி சுமார் 15,000 தொழிலாளர்கள் உள்ளனர்.

உப்பளங்கள், அருகே உள்ள 2,000 ஏக்கர் தனியார் பட்டா உப்பளங்கள் உட்படச் சுமார் 3,000 ஏக்கர் நிலத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத் திட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரபு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உப்பு உற்பத்தியாளர்களுக்கு வைப்பாறு பகுதியில் மாற்று இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இக் கோரிக்கையை ஏற்க மறுத்த சிறு உப்பு உற்பத்தியாளர்கள், “கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது” எனத் தெரிவித்தனர்.

மீன்வளத்துறை அமைச்சர். ஸ்ரீநாத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த உப்பு உற்பத்தியாளர்கள், மாற்று நிலத் திட்டத்தை ஏற்காததால் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவடைந்தது.







