லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ. வ.வேலு ஆஜர்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நெடுஞ்சாலை துறையில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் சிங்கப்பூர் சென்று இருந்த எ.வ.வேலு, அங்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், 15-ந்தேதி (அதாவது இன்று )லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராகவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்றும் ஆஜராகியுள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







