சில விவகாரங்களில் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் ; 5 கேள்விகளை எழுப்பிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ்
தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சில கருத்துக்களை விமர்சித்துப் பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பொன்ராஜ், தன்னை ‘ஆதாய சூதாடி’ என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்க்கு மனைவியாகக் கூட இருப்போம்” என்று பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசிய பெண்களைக் கண்டித்துத் திருத்தாமல், அதை ரசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ‘ஆதாய அரசியல் சூதாடியா’ அல்லது நானா?

கணவரை விட விஜய்யைத் தான் பிடிக்கும்” என்று கூறும் பெண்மணியைக் கண்டிக்காமல் ரசிப்பது முறையா?
குப்பை கூட்டுபவள் கூட நான்கு கணவர்களை வைத்துள்ளாள்” என்று ஒரு மாணவி பேசியபோது, அதைத் திருத்தாமல் ரசித்தது ஏன்?
எனது அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், எதற்கெடுத்தாலும் ‘திமுக பின்னணியில் இருக்கிறது’ என்று கூறுவது ஏன்?
இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. எனது குடும்பத்தை இழிவாகப் பேச உங்கள் ‘வெர்ச்சுவல் வாரியர்களை’ (Virtual Warriors) உருவாக்கி வைத்துள்ளீர்களா?
தன்னைப் பெண்களுக்குப் பாடம் எடுக்கச் சொல்லும் முன்பு, விஜய் சில விவகாரங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
தவெக கட்சி ஆட்களால் பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னைச் சந்திக்க வந்தபோது காரால் இடித்துத் தள்ளப்பட்ட பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கட்சிப் பணிகளுக்காக உயிர்நீத்த இளைஞர்களின் குடும்பப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

“இவற்றை விஜய் முதலில் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். பொது வெளியில் கலாச்சார சீர்கேட்டை உருவாக்குபவர்களை நான் எப்போதும் தட்டிக்கேட்பேன்” என்று பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனக்கு அலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டால், அதன் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.







