மாணவி கொலை வழக்கில் கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம்
விளாத்திகுளம் அருகே மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். மேலும், வருகிற ஏப்ரல் 2-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் முதலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. பாதுகாப்பு சூழல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சிறைத்துறை நிர்வாகம் அவரை இடமாற்றம் செய்ய முடிவு செய்தது.
இதன் அடிப்படையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரன் இரவோடு இரவாக மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்.







