தூத்துக்குடி எண்ணெய் மில் நிறுவன வளாகத்தில் டயபர் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பிரபல எண்ணெய் மில் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டயபர் தயாரிப்பு ஆலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஏவிஎம் மணியின் மகன் சங்கர் மாரிமுத்துவிற்கு சொந்தமான கமலா ஹெல்த் கேர் நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களான டயபர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஆலையின் வெளியே இருந்த மின்வாரிய டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பறந்த தீப்பொறிகள் டயபர் தயாரிப்பிற்காக குடோனில் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்டன் பஞ்சு மீது விழுந்ததால் தீப்பற்றி வேகமாக பரவியது. சில நிமிடங்களில் தீ குடோன் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி கருணாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 6க்கும் மேற்பட்ட அரசு தீயணைப்பு வாகனங்களும், 2 தனியார் தீயணைப்பு வாகனங்களும் என மொத்தம் 8 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து போராடிய பின்னர் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







