கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டி அருகே பசுவந்தனை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லக்கமாள் தேவி கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்து அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படும் கரிமருந்துகள் மற்றும் பட்டாசு தயார் செய்யும் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அறையில் இருந்த சுமார் 300 கிலோ கரி மருந்து , 200 கிலோ கரித்தூள் , 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், பட்டாசுகள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தாலோ, தயாரிப்பில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முறையான அனுமதியுடன் செயல்படும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.







