8-வது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை கிடைக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தன. அதற்கு முன்னதாக, நவம்பர் 3-ந் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, “8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், 8-வது ஊதியக் குழுவுக்கு தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், கடந்த கால நடைமுறைகளை பின்பற்றினால், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. 8-வது ஊதியக் குழு அறிக்கை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதை செயல்படுத்த கூடுதல் நேரம் ஆகலாம். இருப்பினும், அரசாங்கம் பரிந்துரைகளை எப்போது அங்கீகரித்தாலும், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே, 6-வது சம்பளக் குழு சராசரியாக 40 சதவீத சம்பள உயர்வை வழங்கியது. அதே நேரத்தில், 7-வது சம்பளக் குழு 23 முதல் 25 சதவீதம் என்ற அளவிலேயே சம்பள உயர்வை வழங்கியது. அதாவது, தற்போதைய பொருளாதார நிலை அடிப்படையிலேயே இது கணக்கிடப்படும் என்பதால் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, 8-வது ஊதியக்குழு 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், கால அளவு இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில், பணவீக்கம், வரி உயர்வை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படக் கூடும். 8-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது உறுதியானாலும், அரியர் தொகையை எவ்வாறு கணக்கிடுவது? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

அரியர் தொகையை கணக்கிடுவது மிகவும் எளிது. முதலில், ஊழியரின் பழைய அடிப்படை சம்பளத்திற்கும் புதிய முன்மொழியப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கும் இடையிலான வேறுபாட்டை கணக்கிடவேண்டும். பிறகு இந்த வேறுபாடு சம்பள உயர்வு நிலுவையில் உள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்க வேண்டும்.
அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் அகவிலைப்படி (டி.ஏ) தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், புதிய அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்போது, அகவிலைப்படியில் உள்ள வித்தியாசமும் மொத்த நிலுவைத் தொகையுடன் சேர்க்கப்படுகிறது.
தற்போது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசிக்கு மத்தியில் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழு 2027-ம் ஆண்டு மத்தியில் அல்லது 2028-ம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆண்டு கால நடைமுறைப்படி, இதன் அமலாக்க தேதி 2026 ஜனவரி 1-ந் தேதி என அரசு அறிவித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் லட்சக்கணக்கில் அரியர் தொகை கிடைக்கும்.







