சென்னை தேனாம்பேட்டையில் உருவாகும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சிவாஜி கணேசன் பெயர் சூட்ட அகமதாபாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் சங்கத் தலைவர் எஸ். கவிதாஸ்,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த்திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச்சிறப்புவாய்ந்த நடிப்பின்மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள் ஆகியோரை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன்.
தற்போது சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

டாக்டர் கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் , தன் குடும்பத்தினருடன் இறுதிக்காலம்வரை வாழ்ந்த இடம், சென்னை, தேனாம்பேட்டை சந்திப்பு அருகிலுள்ள தெற்கு போக் சாலை என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது செவாலியெ சிவாஜிகணேசன் சாலை என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள அன்னை இல்லத்தில்தான்.
எனவே நடிகர்திலகம் வசித்த இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டுவரும் பாலத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்படுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.
எனவே, தாங்கள், சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தவேண்டும் என்று நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பிலும், குஜராத் வாழ் தமிழர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கையை தாங்கள் ஏற்று, பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது







