தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறக்கோரிகோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் மறியல்

மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலை, 300 பேருக்கு குறைவான தொழிலாளர்கள் பணி செய்யும் நிறுவனங்களை மூடுவதற்கு அரசு ஒப்புதல் வேண்டாம். 50-க்கும் குறைவான தொழிலாளர்களை பணி அமர்த்த லைசன்ஸ் வேண்டாம். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று பொதுவேலை நிறுத்தம் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாறு மறியலில் ஈடுபட ஊர்வலமாக நடந்து சென்றனர். அவர்களை இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில், சிஐடியுவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, தெய்வேந்திரன், ஏஐடியுசியைச் சேர்ந்த பாபு, கிருஷ்ணமூர்த்தி, தொமுசவைச் சேர்ந்த மாரிமுத்து, விசிகவைச் சேர்ந்த முருகன், ஐஎன்டியுசி ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்







