ரூ.10கோடி முறைகேடு புகார் : மாநகராட்சி உதவி ஆணையர் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு
தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்க, 2018ல் ‘பயோமைனிங்‘ முறையில், 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு, குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.
பின், புதிய நிறுவனத்துக்கு, 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

ஆனால், ஒப்பந்தம் எடுத்த நபர், 5,000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, 10.60 கோடி ரூபாய் பில் தொகையை வாங்கியுள்ளார். அதற்கு, 8, 328 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தியுள்ளனர்.
இதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தஞ்சாவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மனு தாக்கல் செய்தார்.
இது வழக்கு நடந்து வந்த நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான ஆவணங்களை எடுத்து சென்றனர்.

விசாரணை மேலும், இது தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வந்த போது, வழக்குப் பதிவு தாமதம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனரும், தற்போதைய துாத்துக்குடி உதவி ஆணையருமான சரவணகுமார் (வயது 48), ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன் (62), பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன் (49), ஒப்பந்ததாரர் மணிசேகரன் (37), ஆகிய 4 பேர் மீதும், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தள்ளனர். மேலும் ,=இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மூன்று அரசு அலுவலர்கள், ஒப்பந்த விதிகளை மீறி, மணிசேகரன் என்ற தனி நபருடன், மாநகராட்சி ஒப்பந்ததாரர் பதிவேட்டில் பதிவு செய்யாத அவரது நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கி உள்ளனர். குப்பை தொடர்பாக ஆய்வறிக்கை கொடுப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட மூன்றாவது குழுவான, சென்னை அண்ணா பல்கலை சூழ்நிலையியல் கல்விமைய அலுவலர்களை எவ்வித அறிவிப்புமின்றி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
குப்பை கிடங்கில் அகற்றப்படாமல் இருந்த குப்பைகளை, அகற்றாமலேயே தரம்பிரித்து அகற்றி விட்டதாக அளவு புத்தகங்களில் போலி பதிவுகளை செய்துள்ளனர். இதனால், அரசுக்கு, 9.57 கோடி ரூபாய் அளவுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.







