உப்பளத்தில் ரூ.27லட்சம் உப்பு திருட்டு : 8 பேருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது.
கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்தனர்.

இதை அறிந்த மகேஷ் உப்பளத்திற்கு விரைந்து சென்று, உப்பை திருடி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு லாரிகளை ஓட்டிச் சென்று விட்டனர்.
900 டன் உப்பை திருடி சென்று விட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.27 லட்சம் என்றும் மகேஷ் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

அவரது புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகநேரிபாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஆனந்த குமார், அவரது தம்பி நாகராஜன் உள்பட 8 பேரை தேடிவருகிறார்.







