கோவில்பட்டியை மாவட்ட தலைநகராக மாற்ற வேண்டும்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு


தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரத்தை பயணத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு, பயணியர் விடுதி முன் பாஜக இளைஞரணி சார்பில் 130 கிலோ சாக்லேட் மாலையும், தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் 13 கிலோ கடலை மிட்டாய் மாலையும் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, வடக்கு மாவட்ட பாஜக தலைவர் கே.சரவணகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
கோவில்பட்டி ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களையும், கரிசல் எழுத்தாளர்களையும் பெற்று தந்த பூமி. இதை மாவட்டத் தலைநகராக மாற்ற வேண்டும்.
டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையை கூட குறைக்கவில்லை. ஆனால், கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் சாலையில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கோவில்பட்டியில் ஒருமுறை கூட திமுக வெற்றி பெற்றது கிடையாது. இந்த முறையும் கடம்பூர் ராஜூ தான் வெற்றி பெற போகிறார். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழி குறித்து பெருமை பேசி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கிறது. விமான நிலையம், சாலை, போக்குவரத்து, மின் இணைப்பு, ரேஷன் பொருள்கள் என பல திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு கொடுப்பது போல் பேசுகின்றனர்.

இண்டியா கூட்டணிக்காக தமிழக முதல்வர் சென்று பிரசாரம் செய்த பிகாரில் 202 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே போல், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். திமுக தொடர்ந்து வெற்றி பெற்று அரசு அமைத்ததே கிடையாது. எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழகத்தில் அடுத்த முதல்வராக இபிஎஸ்தான் வருவார்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

முன்னதாக, கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ பேசினார்.பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலர்கள் பொன் பாலகணபதி, கருப்பு முருகானந்தம், நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன், அயலகத் தமிழர் பிரிவு மாநிலச் செயலர் மாரியப்பன், கயத்தாறு மேற்கு ஒன்றியப் பார்வையாளர் ஜெகதீஷ், மாநிலத் தலைவர்கள் லோகநாதன் (மத்திய அரசு நலத்திட்ட பிரிவு), மகா சுசீந்திரன் (கூட்டுறவு பிரிவு), வடக்கு மாவட்டமுன்னாள் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன், ராமமூர்த்தி, பொதுச் செயலர் வேல்ராஜா, பொருளாளர் சீனிவாசன், நகரத் தலைவர் காளிதாசன், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சின்னப்பன், மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







