எர்ணாகுளம்-பெங்களூரு இடையே 8-ம் தேதி முதல் வந்தே பாரத் ரெயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் காலை 8.15 மணிக்கு சேலம், 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவைக்கு வரும்.
இதேபோல எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தை அடையும். மாலை 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம் வழியாக இந்த ரெயில் பெங்களூரு செல்லும்.

இந்த ரெயில் சேவை தொடக்க நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடக்கிறது. பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் புதிய வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.







