பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மனு
பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட E.B காலனி, ஆனந்தம் நகர் 2,3 தெரு, SSD நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல் பரவி பாதிப்பு ஏற்படுகிறது.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு வேலையும் நடைபெறாமல் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக பேவர் பிளாக் கற்கள் கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி தர கேட்டுக் கொண்டனர்.
மேலும் மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர். அதிகாரிகள் தவறும் பட்சத்தில் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மணி, சின்னதம்பி, ராஜீவ்நகர் கிளை உறுப்பினர் முத்துராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார்,நிர்வாகி இசக்கி, ராஜீவ்நகர் பகுதி பொதுமக்கள் கருப்பசாமி,உத்தரண்டராமன் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







